தமிழ் முஸ்லிம்கள் கூடுமிடம்

பேசலாம் வாங்க..

2006/9/28

எது பெண்ணுரிமை?-3

Tags:
@ 05:24 AM (23 months, 20 days ago)

பர்தாவால் ஏற்படும் நன்மைகள்

முழு அளவு உடலை மூடப்பட வேண்டியவள் பெண். இதற்குக் காரணம், அவளது அழகும் கவர்ச்சியுமாகும். ஆண்களுக்கு காம உணர்ச்சி ஏற்பட நேரம்-காலம் என்ற வரையறை எதுவும் கிடையாது. அவன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் காம உணர்வுக்கு ஆளாகிவிடலாம். அவனது உடல்வாகும் படைப்பும் அப்படி அமைந்துள்ளது. அவன் எளிதில் உணர்ச்சிவசப்படுவான். இந்த உணர்ச்சியை அடக்கிக்கொள்ள பெண்களைத் தேடி அலைவான். ஏழு வயது சிறுமிகூட பாலியல் பலாத்காரத்திற்கு இறையாகிறாள் என்ற குற்றப் பட்டியல்கள் தரும் ஆதாரங்கள் ஆண்களின் காமப் பசியின் எல்லையைத் தெளிவாகக் காட்டுகின்றன.

நிலமை இவ்வளவு மோசமாக இருக்கும்போது. ஒரு பெண் தனது அங்கங்களை ஆடவர்களின் கண்களுக்கு விருந்தாக ஆக்கிக்கொண்டு வெளிப்பட்டால் நிலமை என்னவாகும்? தனியாக விவரித்துச் சொல்லத் தேவையில்லாத அளவிற்கு இன்றைய நடைமுறை இருக்கின்றன. ஆண்களின் அந்த வெறித்தனத்திற்குப் பிறகு பெண்களுக்கு வாழ்வா? சாவா? என்ற கேள்விக்குறி மனத்திரையை ஆக்கிரமிப்பு செய்கின்றன. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட பிறகு சிலர் அதையே தொழிலாக்கி, உடல் வியாபாரிகளாக ஆகிவிடுகிறார்கள். மற்ற சிலர் மனநிலை பாதிக்கப் பட்டவர்களாகவும், பைத்தியங்களாகவும் அலைகிறார்கள். இன்னும் சிலர் தற்கொலைகளால் தம் வாழ்க்கையையே முடித்துக்கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படுவதற்குக் காரணம்... பெண்களின் உடல். அந்த உடலை மறைக்க வேண்டிய முறையில் மறைக்காமல் வெளியில் செல்வதால் ஏற்படும் அபாயம், பெண்களுக்கு ஏற்படும் இவ்வவளவு பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும் ஒரு சக்தி இருக்கிறதென்றால் அது மாதர் சங்கங்களோ, மகளிர் மன்றங்களோ, சாசன சட்டங்களோ அல்ல. அது 'பார்தா' ஒன்றுதான். பெண்களுக்கு பர்தாவாவல் ஏற்படும் மிகப் பெரிய நன்மை இதுதான் என்பதை நடுநிலையோடு அணுகும் எந்த ஆய்வாளனும் மறுக்க மாட்டான்.

இதைத்தான் குர்ஆனும் கூறுகிறது
நபியே! நம்பிக்கைக் கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ்நோக்கி வைத்துக்கொள்ளட்டும். இன்னும் தங்களது வெட்கத்தலங்களையும் மறைத்துப் பாதுகாத்து வரட்டும். தங்கள் இயற்கை அழகிலிருந்து தெரியக்கூடிய(முகம் மற்றும் கைகளின் முன் பகுதிகளை)த் தவிர வெளியில் காட்டலாகாது. (அல்குர்ஆன் - 24:31)

நபியே! நீர் உம் மணைவியர்களுக்கும், உம் பெண் மக்களுக்கும், நம்பிக்கைக்கொண்ட பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்பட்டு நோவினை செய்யாமலிருக்க இது சுலபமான வழியாகும். (அல்குர்ஆன் - 33:59)

பர்தாவைப் பற்றி சில குடும்பத் தலைவிகளை அணுகி விசாரித்தோம். அனைவரும் ஒரே குரலில் ''பர்தா மானத்தைக் காக்கும் கேடயம் - அழகைப் பாதுகாக்கும் அரண்' என்ற பதிலைத்தான் சொன்னார்கள். ஒரு குடும்பத் தலைவி வித்தியாசமான அனுபவ ரீதியான ஒரு கருத்தைச் சொன்னார்.

----- பர்தா என்பது எங்களின் மானத்தைக் காக்கும் கேடயம் மட்டுமல்ல, பல வியாதிகளிலிருந்தும் எங்களைத் தடுக்கிறது என்கிறார். அவர் கூறும்போது:- ஜனத்தொகை நிறைந்த இடத்திற்கு நாம் செல்கிறோம் (உதாரணம்: பஸ் ஸடாப்பில்) அங்குள்ள எல்லா மக்களும் தூய்மையானவர்கள் என்று கூறமுடியாது. வியாதியஸ்தர்கள், அழுக்கேறியவர்கள் என்று பலர் நம்மீது உரசும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் அவர்கள்மீதுள்ள கிருமிகள் - அழுக்குகள் நேரடியாக நம்மைத் தாக்காமல், பர்தா பாதுகாத்து உடலுக்குச் சுகாதாரத்தைக் கொடுக்கிறது. பஸ் ஸடாப்பில் கிடக்கும் குப்பை கூலங்கள், அசுத்தங்கள் ஆகியவற்றில் உட்கார்ந்துவிட்டு பறக்கும் கொசுக்கள் - ஈக்கள் நம்மீது உட்கார்ந்து, நோயை, சுகாதாரக் கேட்டை விட்டும் தடுக்கிறது பர்தா. அந்த குடும்ப தலைவியின் யதார்த்தமான கருத்து பர்தாவின் அவசியத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

தஸ்லிமாக்களும், தஸ்லிமாவிற்குத் தலையாட்டும் சோஷலிஸவாதிகளும் கருதுவது போல் பர்தா பெண்ணடிமையின் சின்னமல்ல. மாறாக, அவளது ஒழுக்க நெறிக்காக ஏற்படுத்தப்பட்ட ஆதாரம் பர்தா. காம கழுகுகளின் வேட்டை தாக்குதலிலிருந்து பாதுகாப்பது பர்தா என்பதை அறிவு ஜீவிகளும் முற்போக்குவாதிகளும் உணரட்டும்.  (தொடர்வோம்)

பரங்கிப்பேட்டை. ஜி.என்